புதுடெல்லி: செவித்திறன் மாற்றுத் திறனாளி வழக்கறிஞர்கள், சைகை மொழியில் வாதிடுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, வழக்கறிஞர் சஞ்திதா அய்ன், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதாவது, செவித்திறனற்ற மாற்றுத்திறனாளி சாராஹ் சன்னி ஒரு வழக்கில் முன்னிலையாகிறார். எனவே அவரிடம் சைகை மொழியில் வாதிட அனுமதிக்குமாறும், அவர் காணொளி மூலம் முன்னிலையாகி வாதிட அனுமதிக்குமாறும் கோரிக்கை வைத்தார்.
உடனடியாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அந்த கோரிக்கைக்கு அனுமதி அளித்து, காணொளி வாயிலாக வாதிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினார்.
அதையடுத்து, சைகை மொழியில் வாதிட்டவரின் வாதங்கள் எழுத்துபூர்வமாக மொழி பெயர்க்கப்பட்டது. அதேபோல், நீதிபதிகளும் எதிர்த் தரப்பினரும் கூறும் வாதங்களை, சாராஹ் சன்னிக்கு சைகை மொழியில் எடுத்துக்கூறப்பட்டது.
இருவரும் மாறி மாறி மிக விரைவாக வாதங்களை முன்வைத்தது, நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகக் கூறப்படுகிறது.