மலேசியாவில் காணாமல்போன இந்தியாவைச் சேர்ந்த மலையேறி நந்தன் சுரேஷ் நட்கர்னியின், 44, உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22ஆம் தேதி குனுங் ஜசாரில் அவர் காணாமல் போனார்.
ஞாயிறு காலை 11.20 மணிக்கு அவரது உடல் கீழே கொண்டு வரப்பட்டது என்று பாகாங் காவல்துறை தலைவர் யஹாயா உத்மான் தெரிவித்தார்.
“சனிக்கிழமை பிற்பகல் காணாமல்போனவரின் உடலைக் கண்டுபிடித்தோம். குனுங் ஜசார் மலையடிவாரத்தில் போஸ் அடாப் அருகில் உள்ள நீரோடையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது,
“குனுங் ஜசார் மலை உச்சியிலிருந்து இறங்கியபோது அவர் பாதை தவறி பேராக் எல்லையில் விழுந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது,” என்று நேற்று செய்தியாளர் கூட்டத்தில் திரு யஹாயா உத்மான் கூறினார்.
கடந்த வாரம் கேமரன் மலைப் பகுதியில் உள்ள குனுங் ஜசாரில் ஏறியபோது இந்திய மலையேறியான நந்தன் சுரேஷ் நட்கர்னி காணாமல்போனார்.
இதையடுத்து தேடி மீட்கும் குழுவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு கண்காணிப்புப் படக்கருவிகளை ஆராய்ந்தனர். அப்போது ஹோட்டலில் இருந்த படக்கருவிகளில் அவர் மலையேறுவதற்காக செப்டம்பர் 22ஆம் தேதி காலை 9.00 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. தீயணைப்புத் துறை, குடிமைத் தற்காப்புப் படை உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏறக்குறைய 101 அதிகாரிகள் அவரைத் தேடி வந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கடைசியில் சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அடர்த்தியான காட்டுப் பகுதியில் உள்ள நீரோடையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே மலையேறியின் உடல் கேமரன் மலையில் உள்ள சுல்தானா ஹாஜ்ஜா கால்சம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்படும். தேடி மீட்புக் குழுவுடன் சேர்ந்து அவரைத் தேடிய நண்பரிடம் தகவல் தெரிவித்துள்ளோம் என்று யஹாயா உத்மான் கூறினார்.
இந்திய மலையேறி, குனுங் ஜசாரில் மலையேறுவதாக நண்பரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் ஹோட்டலுக்குத் திரும்பவில்லை.
செப்டம்பர் 25ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நந்தன் சுரேஷ் நட்கர்னி மலேசியா வந்துள்ளார். அதற்கு முன் கேமரன் மலையில் மலையேறுவதற்காக அவர் சென்றுள்ளார்.
ஹோட்டலில் அவர் தனியாகவே அறைக்கு முன்பதிவு செய்துள்ளார். அவரது அறையை காவல்துறை ஆராய்ந்தபோது கடவுச்சீட்டு, மடிகணினி, உடைகள், பணப்பை உள்ளிட்ட அவரது தனிப்பட்ட உடமைகள் அறையிலேயே இருந்தன.

