மாவோயிஸ்டு அனுதாபிகளைக்குறிவைத்து என்ஐஏ சோதனை

மாவோயிஸ்டு அனுதாபிகளைக்குறிவைத்து என்ஐஏ சோதனை

2 mins read
22f212d3-f354-484f-aa7e-79ab38d393d1
தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் திங்கட்கிழமை காலை தேசிய புலனாய்வு முகமை அதிரடிச் சோதனை நடத்தியது. - படம்: ஐஏஎன்ஸ்
Google News Preferred Icon

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் திங்கட்கிழமை காலையில் மட்டும் திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனை புதன்கிழமையும் தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு இடங்களில் மக்கள் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களின் வீடுகள், வழக்கறிஞர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புகுந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

மாவோயிஸ்டு அனுதாபிகள் மற்றும் ஆதரவாளர்களைக் குறிவைத்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் என்ஐஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஐஏஎன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் சமூக ஆர்வலர் பவானி, வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் வீடுகள் உள்ளிட்ட பல சமூக அமைப்புகளின் தலைவர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில், விஜயவாடா, பொன்னுரு, மங்கலகிரி, பாப்பாத்லா, நெல்லூர், அமதலவலசா மற்றும் அனந்தப்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

செம்மரக் கடத்தலுக்குத் துணைபோனதாக 20 தமிழர்கள் திருப்பதி அருகே சேஷாசலம் காட்டுப்பகுதியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடிய திருப்பதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திங்கட்கிழமை காலை முதல் தனி என்ஐஏ குழுக்கள் மாநிலக் காவல்துறையினருடன் இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, என்.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் கூறுகையில், “ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள், நக்சல்கள் மற்றும் இவர்கள் தொடர்பான வழக்குகளின் முன்னிலையான வழக்கறிஞர்கள் உட்பட சந்தேகத்துக்குரிய ஆட்களுக்குச் சொந்தமான 60க்கு மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது,” என்று தெரிவித்தனர்.

ஆந்திராவின் குண்டூர், நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களிலும், தெலுங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது.

கொத்தகுடெம் பகுதியின் செர்லா மண்டலத்தில் கடந்த ஜூன் மாதம் மூன்று பேரிடம் இருந்து வெடிகுண்டுப் பொருட்கள், டிரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 12 பேர் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது.

அதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதம் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் சத்தீஸ்கரிலும் மாவோயிஸ்டு இயக்க அனுதாபிகளின் கட்டடங்களில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்