திருப்பதி: திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த சிறுவன் சில மணி நேரங்களிலேயே பத்திரமாக மீட்கப்பட்டான்.
சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், காவல் துறைக்கும், ஊடகங்களுக்கும் சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
சென்னையை சேர்ந்த சந்திரசேகர் - மீனா தம்பதிக்கு 8 வயதில் மோகன் வசந்த், 2 வயதில் அருள் முருகன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தம்பதி குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றனர்.
வழிபாடு முடிந்து திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை செல்ல திருப்பதி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அசதியில் இரவு சென்னை செல்லும் பேருந்துகள் நிறுத்தம் அருகே படுத்து உறங்கினர். இந்நிலையில், அதிகாலை மீனா அருகே படுக்க வைக்கப்பட்டுருந்த சிறுவன் அருள் முருகனைக் காணவில்லை.
குழந்தை காணாமல் போனதைக் கண்ட தம்பதி பேருந்து நிலையத்தில் இருந்த புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
விரைவாக செயல்பட்ட காவல்துறையினர் கண்காணிப்புக் கேமரக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபர் ஒருவர் குழந்தையை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நான்கு தனிப்படைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் மர்ம நபரின் படம் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் அனுப்பி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருப்பதி அடுத்த ஏர்பேடு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் காணாமல் போன அதே குழந்தையை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
அதன் பின்னர் பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.