ஓய்வு உபசார விழா; கண்ணீர் விட்டு அழுத யானை; வாலாட்டி விடைபெற்ற நாய்

2 mins read
6047d386-a432-4088-ab21-9239da6df14e
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கோர்பெட் புலி வனப் பூங்காவில் வேலை பார்த்த யானையும் நாயும் ஓய்வு பெற்றன. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 3

டேராடூன்: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கோர்பெட் புலி வனப் பூங்கா என்ற புலிகள் காப்பகம் இருக்கிறது.

அதில் சேர்ந்து வேலை பார்க்க 40 ஆண்டுகளுக்கு முன் அசாமில் இருந்து ஒரு பெண் யானை வந்து சேர்ந்தது. 

அந்த யானைக்கு கோம்தி என்று ஊழியர்கள் பெயர் வைத்தனர். அது மிகவும் சாதுவானது. ஊழியர்கள், அதிகாரிகள், விலங்குகளுடன்கூட அன்பாக பழகியது.

சுபேதார் அலி (ஓய்வு), நிசார் அலி (ஓய்வு), ஃபாருக் கான் ஆகிய பாகர்கள் அதை அன்புடன் கவனித்து வந்தனர்.

கடந்த 1987ல் அந்தப் பூங்காவில் இருந்து ஒரு புலி தப்பி ஓடிவிட்டது. அதை வெற்றிகரமான முறையில் பிடிக்க அதிகாரிகளுக்கு கோம்தி உதவியது.

சுந்தரகால் என்ற கிராமத்தில் 2010ல் பலரையும் கொன்று தின்று உயிர் வாழ்ந்த ஒரு புலியைப் பிடிக்க அந்த யானை அதிகாரிகளுக்கு உதவியது.

ரிஷிகேஷில் 2012ல் காட்டு யானை ஒன்றைப் பிடித்துக் கொடுத்து கோம்தி உதவியது.

திகாலா என்ற பகுதியில் ஒரு புலியை அதிகாரிகள் பிடித்து பூங்காவுக்குக் கொண்டு வரவும் அது உறுதுணையாக இருந்தது.

சட்டப்படி 65 வயது வரைதான் யானை வேலை பார்க்கலாம். கோம்தி ஓய்வு வயதை எட்டிவிட்டது.

அதேபோல் பிராண்டி என்ற மோப்ப நாய் 12 ஆண்டுகளுக்கு முன் அங்கு வேலைக்கு வந்தது.

அந்த நாய் பல்வேறு பணிகளிலும் அதிகாரிகளுக்குப் பக்க பலமாக இருந்து வந்தது. பாம்புக் கடித்து இறந்துபோக இருந்த மூன்று அதிகாரிகளை பிராண்டி காத்தது. மோப்ப நாய் 12 வயது வரைதான் வேலை பார்க்கலாம் என்பது சட்டம். அதன்படிகோம்தி, பிராண்டி இரண்டிற்கும் வேலை ஓய்வு அறிவிக்கப்பட்டது.

யானை கோம்தியும் நாய் பிராண்டியும் வேலை ஓய்வு பெறுவதைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்த அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

அந்தப் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆம்தாண்ட கேட் என்ற பகுதியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பெரிய அதிகாரிகளும் ஊழியர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். அப்போது பலரும் கண்ணீர் விட்டனர். அதைப் பார்த்த யானையும் கண்ணீர்விட்டு அழுதது.

அப்போது நாய் பிராண்டி தன் வாலை ஆட்டி ஆட்டி அதிகாரிகளையும் ஊழியர்களையும் நக்கிக் கொடுத்து தன் நன்றியை வெளிப்படுத்தியது. நிகழ்ச்சியில் யானைப் பாகர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. யானைக்கும் நாய்க்கும் விருது அளிக்கப்பட்டது.

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற யானை, நாய் இரண்டிற்கும் சட்டப்படி அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அவை கடைசி வரை எந்தக் குறையும் இன்றி வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்