லடாக் தன்னாட்சி மலை கவுன்சில் தேர்தலில் பாஜக படுதோல்வி

2 mins read
8d8d6781-13d8-4b0f-b6a3-114d5d48d10a
லடாக் கார்கில் நடந்த தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் மக்கள். - படம்: ஊடகம்

காஷ்மீர்: லடாக் கார்கில் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் இண்டியா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி கண்டுள்ளது.

இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், லடாக் மற்றும் கார்கில் பகுதியில் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணத்தின் விளைவாக மக்களின் நம்பிக்கையை இண்டியா கூட்டணி வென்றெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெயராம் ரமேஷ், தேசிய ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த போதிலும், தேர்தலில் காங்கிரஸ் தனி முத்திரை பதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தினால் பாஜகவை காங்கிரஸ் துடைத் தெரிந்துள்ளது எனவும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த வெற்றி குறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், இண்டியா கூட்டணிக்கு இது மகத்தான வெற்றி எனவும் பாஜகவிற்கு இது படுதோல்வி எனவும் குறிப்பிட்டுள்ளார். சிறப்புத் தகுதி மீட்டுக்கொள்ளப்பட்ட பிறகு நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள், பாஜகவின் தவறான நோக்கம் நிராகரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரான ஓமர் அப்துல்லா வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், காங்கிரஸ் உடனான இண்டியா கூட்டணியின் மூலம் கொண்டாட்டமான வெற்றியை பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

ஆளுநர் மாளிகைகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதிகளின் பின்னால் பாஜக இனியும் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்