புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் மாண்டனர்; ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
பாஹாநகா ரயில் நிலையத்தில், சென்னை - மேற்கு வங்கத்திற்கு இடையில் பயணம் செய்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹவுரா விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தின.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அடையாளம் காணப்படாத 28 பேரின் சடலங்கள் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த 28 சடலங்கள் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரயில் விபத்து நடந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை உறவினர்கள் யாரும் உயிரிழந்தவர்களைத் தேடி வராததால் இவர்களது உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.