மும்பை: மும்பையின் பொதுப் பேருந்து நிறுவனமான ‘பெஸ்ட்’, பசுமை உருமாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக நகர சாலைகளில் இருந்து பழைய ஈரடுக்குப் பேருந்துகளை நீக்குகிறது.
பழைய சிவப்புப் பேருந்துகள் செப்டம்பர் இறுதியில் சேவையிலிருந்து நீக்கப்பட்டன. ‘நீலாம்பரி’ எனப்படும் திறந்தவெளி பேருந்துகள், கடைசியாக அக்டோபர் 5ஆம் தேதி சாலைகளில் வலம் வந்தன.
‘பெஸ்ட்’ நிறுவனத்திடம் ஏறக்குறைய 400 மின்சாரப் பேருந்துகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுதலான பேருந்துகளை வாடகைக்கு எடுக்க அது திட்டம் கொண்டுள்ளது.
1937ல் மும்பையில் ஈரடுக்குப் பேருந்துகள் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில், மும்பை சாலைகளில் கிட்டத்தட்ட 900 ஈரடுக்குப் பேருந்துகள் சென்றன.
பல்வேறு பாலிவுட் திரைப்படங்களிலும் இத்தகைய பேருந்துகள் இடம்பெற்றன.

