புதுடெல்லி: மத்திய கிழக்கில் இஸ்ரேலும் ஹமாஸும் போரிட்டு வரும் வேளையில் இஸ்ரேலில் ஏராளமான இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர். இதுவரை மத்திய அரசாங்கத்தின் முயற்சியில் 800க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கடந்த வாரம் இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் போராளிகள் திடீர் தாக்குதல் நடத்தி பலரை பிணைப் பிடித்துச் சென்றனர்.
இதற்குப் பதிலடியாக காஸா வட்டாரத்தில் இஸ்ரேல் ஏராளமான குண்டுகளை வீசி பல கட்டடங்களை தரைமட்டமாக்கியுள்ளது.
இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை 8வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 447 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இந்தியா வந்துள்ளனர்.
நேற்று அதிகாலை 3வது விமானத்தில் 197 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.
மேலும் இஸ்ரேலில் சிக்கித் தவித்த 274 இந்தியர்களுடன் இந்தியா புறப்பட்ட 4வது விமானம் சனிக்கிழமை காலை டெல்லி வந்தடைந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 800க்கும் அதிகமான இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.