ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் ஹசிபி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்ட்களுக்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி சுட்டனர்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த என்கவுண்ட்டரில் மாவோயிஸ்டு ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில், அவருடன் இருந்த சக மாவோயிஸ்டுகள் அவரை அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
அதனைத் தொடர்ந்து அந்த மாவோயிஸ்டை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவருக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதை பாதுகாப்புப் படையினர் உணர்ந்தனர்.
இதனால் பாதுகாப்பு படையினர் அந்த மாவோயிஸ்டை தங்களின் தோள்களில் சுமந்து கொண்டு வனப்பகுதி வழியாக சுமார் 5 கி.மீ. நடந்தே சென்று, அவரை தங்களின் முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சையின் மூலம் டாக்டர்கள் அவரின் உயிரை காப்பாற்றினர்.
எதிரியாக இருந்தாலும் உயிரைக் காப்பாற்ற பாதுகாப்புப் படையினர் முயன்றது சமூக ஊடகங்களில் பாராட்டப்படுகிறது.