சுரேந்திரநகர் (குஜராத்): குஜராத், லக்தார் தாலுகா வானா கிராமம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குஜராத் தியோதர் நகரில் இருந்து ஜூனாகத் நோக்கி சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் 55 முதல் 60 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்து வானா கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் இருந்த பயணிகளில், சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அந்த பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.