மகாராஜ்கஞ்ச்: இந்திய-நேபாள எல்லையையொட்டி உள்ள கிராமங்களில் இருந்து நேபாளத்துக்கு அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூரைச் சேர்ந்த அரிசி கடத்தல்காரர்கள் சார்பாக, அந்த கிராமங்களை சேர்ந்த இளையர்கள், பெண்கள், முதியவர்களும் அரிசியை கடத்தி, எல்லைப் பகுதிகளில் நேபாள வணிகர்கள் அமைத்துள்ள கிடங்குகளில் சேர்க்கின்றனர்.
10 கிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட எடைகொண்ட அரிசி மூட்டைகளை கொண்டு செல்லும் அவர்களுக்கு ரூ.300 கூலிகிடைக்கிறது. பெரும்பாலானோர் அதிக வருமானம் ஈட்டும் நோக்கில் அடுத்தடுத்து பலமுறை அரிசி மூட்டைகளை எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த ஜூலையில் பாசுமதி அல்லாத பிற அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்ததை அடுத்து, நேபாளத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.70 வரை அதிகரித்துள்ளது. இதனால் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது என்று உள்ளூர் வணிகர்கள் கூறினர்.
கடந்த 4 மாதங்களில் நேபாளத்துக்குக் கடத்தப்பட்ட 111.2 டன்னுக்கும் அதிகமான அரிசியை காவல் துறையும், எல்லை காவல் படையான சஷஸ்திர சீமா பல்லும் பறிமுதல் செய்துள்ளது.