புதுடெல்லி: திருமணத்துக்கு மறுநாள், மணமகன் வீட்டிலிருந்து 150,000 ரூபாய் ரொக்கம், நகைகளைத் திருடிச் சென்றுள்ளார் மணப்பெண். டெல்லி குருகிராம் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து மணமகனின் தந்தையான அசோக் குமார் என்பவர் காவல்துறையில் புகார் செய்தார். அந்த பெண் தேடப்பட்டு வருகிறார்.
தனது நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான மஞ்சு என்ற பெண்ணிடம், தமது மகனுக்கு பெண் பார்க்கும்படி அசோக் குமார் கூறியுள்ளார். வசதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் என கூறி, பிரீத்தி என்பவரை மஞ்சு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
வரதட்சணை எதுவும் வாங்காமல், பிரீத்தியை தனது இளைய மகனுக்கு திருமணம் செய்ய அசோக் முடிவு செய்தார். அத்துடன், மணமகளின் குடும்பத்தினருக்கு உடைகள் வாங்கிக்கொடுத்ததுடன் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் கொடுத்தனர்.
ஜூலை 26ஆம் தேதி, மஞ்சுவும் மற்றொருவரும் பிரீத்தி என்ற பெண்ணுடன் ஜாஜ்ஜார் நீதிமன்றத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் நீதிமன்றத் திருமணத்தை நடத்தினர். திருமணத்தைத் தொடர்ந்து, அசோக் குமார் தனது புதிய மருமகளுடன் வீடு திரும்பினார். அவர்கள் வீட்டில் இரவு வரை கொண்டாட்டம் தொடர்ந்தது.
மறுநாள் காலையில், பிரீத்தி ரொக்கம், நகைகளுடன் ஓடிப்போனதை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
காவல்துறையினர் பிரீத்தி, மஞ்சு உட்பட மேலும் ஒரு சந்தேகநபரையும் தேடி வருகின்றனர்.