பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களும் கன்னடம் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மைசூரு மாநிலம் கர்நாடகா என்று பெயர் மாற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதையொட்டி கன்னடம் மற்றும் கலாசாரத்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் சித்தராமையா, “கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியைப் பரப்ப வேண்டும். கன்னடம் இங்கு இன்றியமையாத மொழியாக இருக்க வேண்டும்.
“கர்நாடகா தனி மாநிலமான பிறகு பல்வேறு மொழி பேசும் மக்கள் கன்னட நிலத்தில் குடியேறினர்.
“கன்னடக்காரர்கள் நம் மொழியை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக, மற்றவர்களின் மொழியை நாம் கற்றுக்கொண்டோம். இதனால், கர்நாடகாவின் சில பகுதிகளில் புலம்பெயர்ந்த மக்கள் கன்னடம் பேசவே இல்லை. கன்னடக்காரர்களின் பெருந்தன்மையால் தான் இந்தப் போக்கு உருவாகியுள்ளது.
“பிற மொழிகளை நேசிக்க வேண்டும். ஆனால், நம் மொழியை நாம் மறந்துவிடக் கூடாது. பல ஆண்டுகளாக கன்னடம் அலுவல்மொழியாக இருந்தும், நிர்வாகத்தில் கன்னடம் அமல்படுத்தப்படாததற்கு அலட்சியமே முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.
“எனவே, கர்நாடகாவில் வசிக்கும் அனைவரும் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும். கன்னடம் பேசாத பிற மாநில குடியிருப்பாளர்கள் உங்கள் அருகில் வசித்தால் அவர்கள் கன்னட மொழியைக் கற்க கர்நாடக மக்கள் உதவ வேண்டும்,” என்று பேசினார்.