தானே: பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணம் செய்த 4,438 பேர் ஒரே நாளில் பிடிபட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் நகர் ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை நடந்த அதிரடிச் சோதனையின்போது அவர்கள் சிக்கினர்.
அவர்களில் யாருமே பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 16.85 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு நாளில் பயணச்சீட்டு இல்லாமல் இத்தனை போ் பிடிபட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
பயணச்சீட்டு வாங்காமல் பலர் பயணம் செய்தது தெரிய வந்ததும் 167 பயணச்சீட்டு பரிசோதகர்கள் இரு மூத்த அதிகாரிகளின் தலைமையில் களமிறக்கப்பட்டனர். அவர்களின் பாதுகாப்புக்கு 35 ரயில்வே பாதுகாப்புப் படையினர் உதவி செய்தனர்.
ரயில் நிலையத்தின் உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, திங்கட்கிழமை காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் பயணச் சீட்டு பரிசோதனையை பரிசோதகர்கள் மேற்கொண்டனா்.