புதுடெல்லி: துபாயில் வசிக்கும் தமிழரான மகேஷ்குமார் நடராஜன் அங்கு நடைபெறும் லாட்டரி குலுக்கலில் ஒன்றான ஃபாஸ்ட்5 கிராண்ட் லாட்டரியில் பரிசு வென்றுள்ளார்.
இதில் வென்றவருக்கான பரிசுத் தொகையாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 25,000 திராம் (இந்திய மதிப்பில் ரூ.5.6 லட்சம்) அளிக்கப்படும்.
ஆம்பூரைச் சேர்ந்த மகேஷ்குமார் 2019-ல் துபாயில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் திட்ட மேலாளாராகப் பணியாற்றி வருகிறார். துபாய் சென்ற பிறகு தான் இதுபோன்ற குலுக்கல் இருப்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது.
பரிசு வென்ற பிறகு மகேஷ்குமார், “என்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்துள்ளேன். என் சமூகத்தைச் சார்ந்த பலர் என் படிப்பிற்கு உதவி செய்ததால்தான் என்னால் படிக்க முடிந்தது.
“எனக்கு உதவிய சமூகத்திற்கு திருப்பிச் செய்வதற்கான நேரம் இது. சமூகத்தில் தேவையுள்ளவர்களுக்கு நான் நிச்சயம் இந்தத் தொகையைக் கொண்டு உதவுவேன்,” என்று கூறியுள்ளார்.
49 வயதான மகேஷ்குமாருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களது படிப்புக்கு இதனைப் பயன்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.