திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், இயற்கை எழில் கொஞ்சும் திருமலையின் அழகையும் அங்குள்ள சுற்றுலா தலங்களையும் கண்டு களித்து வருகின்றனர்.
இதற்காக திருமலையில் தேவஸ்தானத்தின் பேருந்துச் சேவை அளிக்கப்படுகிறது. மேலும் தனியார் ஜீப்புகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் அங்குள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களையும் பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கோவில் நகரமான திருப்பதியில் உள்ள மற்ற கோவில்களுக்கும் சென்று வருகின்றனர் பக்தர்கள்.
அதன்படி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்த ராஜ சுவாமி கோவில், கபில தீர்த்தம், கோதண்ட ராமர் கோவில், கங்கம்மா கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்பட ஏராளமான கோவில்கள் உள்ளன. மேலும் திருமலை தேவஸ்தான தோட்டம், தலகோனா நீர்வீழ்ச்சி, ஸ்ரீவாரி அருங்காட்சியகம் என பல சுற்றுலாத் தலங்களும் உள்ளன.
இந்நிலையில் திருப்பதியில் வசிக்கும் மக்களும், திருப்பதிக்கு வரும் பக்தர்களும் பயன்பெறும் வகையில் ஹெலிகாப்டர் ‘உல்லாசப் பயணம்’ தொடங்கப்பட்டுள்ளது என்று சமயம் இணையச் சஞ்சிகை தெரிவித்தது.
சென்னையைச் சேர்ந்த ‘ஏரோடான் என்ற நிறுவனம் இந்தச் சேவைகளை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் அது தெரிவித்தது.
ஏரோடான் நிறுவனம், இந்தச் சேவைக்காக திருப்பதிக்கு கொண்டுவரப்பட்ட ஹெலிகாப்டருக்கு தும்மலகுண்டாவில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் அர்ச்சகர்கள் பூஜை செய்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி , சந்திரகிரி எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
திருமலை தலைவர் பூமனா கருணாகர ரெட்டி இந்த சேவையை தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி துணை மேயர் பூமனா அபினய் ரெட்டி, துடா தலைவர் செவிரெட்டி மோஹித் ரெட்டி ஆகியோர் ஹெலிகாப்டரில் பயணம் செய்து நகரின் அழகை கண்டு ரசித்தனர்.
திருப்பதியில் வசிக்கும் மக்களுக்கும் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கும் மலிவு விலையில் ‘ஹெலிகாப்டர் ஜாய் ரைடு’ வழங்கப்படும் என்று ஏரோடான் நிறுவனம் தெரிவித்துள்ளது.