மைசூரு: கர்நாடக மாநிலத்தின் மைசூரு நகரில் பன்னெடுங்காலமாக தசரா திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டு 414வது ஆண்டாக, அக்டோபர் 15ஆம் தேதி முதல் இவ்விழா கொண்டாடப்பட்டுவருகிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு, மைசூரு அரண்மனை உட்பட நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
இளையர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர்க் கண்காட்சி, திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரண்மனையில், மன்னர் யதுவீர் தலைமையில் பாரம்பரிய, கலாசார முறைப்படி நவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை (அக். 24) மாலை ஜம்பு சவாரி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மனை ஏந்தியபடி 14 யானைகள் மைசூரு நகரின் முக்கியச் சாலைகள் வழியாக ஊர்வலம் செல்லும்.
இத்துடன், சாகச நிகழ்ச்சிகளும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இவ்விழாவைக் காண மைசூரில் லட்சக்கணக்கானோர் குவிந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. காவல்துறையைச் சேர்ந்த 3,000 பேர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.