பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இஸ்லாமிய மாணவிகள் ‘ஹிஜாப்’ எனப்படும் தலையங்கியை அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலக் கல்வியமைச்சர் சுதாகர் இதனைத் தெரிவித்தார்.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
மாநிலத்தில் பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் மட்டுமன்றி அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் முஸ்லிம் மாணவிகள் தலையங்கி அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே முஸ்லிம் மாணவிகள் தலையங்கி அணிந்து நீட் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அவர் சுட்டினார்.
எனவே தங்கள் அரசாங்கம் இவ்வாறு முடிவெடுத்ததில் தவறில்லை என்றார் திரு சுதாகர்.
இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த அனுமதியைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்துத்துவா அமைப்புகள் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.