‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்னும் கிருமியை அழிப்பதற்கே தெலுங்கு தேசம் - ஜன சேனா கூட்டணி’

‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்னும் கிருமியை அழிப்பதற்கே தெலுங்கு தேசம் - ஜன சேனா கூட்டணி’

2 mins read
a4d710c8-ed8c-418e-9a72-ea6fe1a3a365
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு கிருமி. அந்தக் கிருமியை ஒழித்துக்கட்டுவதற்கே ஜன சேனா - தெலுங்கு தேசக் கட்சியின் கூட்டணி என்று கூறியுள்ளார் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண். - படம்: திஇந்து

விஜயவாடா: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்னும் கிருமியை அழிக்கும் மருந்தாக தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி அமைந்துள்ளது என்று ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

2024 ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலை தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கட்சி இணைந்தே சந்திப்பது என முடிவு செய்துள்ளன.

ராஜமகேந்திரவரத்தில் பவன் கல்யாண் மற்றும் தெலுங்கு தேசம் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் இணைந்து பங்கேற்ற முதல் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் இது உறுதி செய்யப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் தெலுங்கு தேசம் கட்சித் (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த இரண்டு கட்சிகளும் கூட்டுச் சேர்ந்தன.

“2024 மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் நலனை உறுதி செய்வதே எங்கள் கூட்டணியின் நோக்கமாக உள்ளது. ஆந்திரா வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்துவைக்க வேண்டுமெனில் அனுபவமிக்க தலைவரை நாம் பெற்றிருக்க வேண்டும். நாங்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அல்லது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரானவர்கள் அல்ல.

“ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்கள், பொய் வழக்குகள், சாமானிய மக்களை அச்சுறுத்துதல், வளங்களைக் கொள்ளை அடிப்பது மற்றும் மதுபானக் கொள்கைகள் ஆகியவற்றை நாங்கள் எதிர்க்கிறோம்.

“வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கூட்டணிதான் ஒய்எஸ்ஆர் காங். எனும் கிருமியை அழிக்கும் அருமருந்து,” என அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்