புதுடெல்லி: மத்திய கிழக்கில் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் அக்டோபர் 7ஆம் தேதி தரை, கடல், ஆகாயம் வழி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.
அத்தகைய தாக்குதலை தன் மீது எந்தவோர் அமைப்பும், நாடும் நடத்தாமல் தற்காப்பை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தியா எல்லைப் பகுதியில் கண்காணிப்பு வானூர்திகளை ஈடுபடுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் கூடிய எல்லையில் கண்காணிப்பு வானூர்திகளுடன் கூடிய ஒரு தற்காப்பு முறையை இந்தியா அமைத்து வருவதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்தியாவின் தற்காப்புத் துறை அதிகாரிகள் இந்தியாவின் ஆறு வானூர்தி நிறுவனங்களின் தலைவர்களைச் சென்ற வாரம் சந்தித்து பேச்சு நடத்தி இருக்கிறார்கள்.
வானூர்திகளை உருவாக்கி கொடுக்கும்படி அநேகமாக அடுத்த மாதம் இந்திய அரசாங்கம் அந்த நிறுவனங்களைக் கேட்டுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புளூம்பர்க் நிறுவன அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இந்திய அதிகாரிகள் இந்த விவரங்களைத் தெரிவித்ததாக புளூம்பர்க் கூறியது.
இந்தியா கடந்த காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களைச் சந்தித்து இருக்கிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயுத பாணி தீவிரவாதிகள் 2008 ஆம் ஆண்டில் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி 166 பேரைக் கொன்றுவிட்டார்கள்.