பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் மேற்குக் கடற்கரையில் ஒரு மூலையில் இருந்த அதானி நிறுவனம் தற்போது இந்தியாவின் 5,422 கிலோமீட்டர் கடற்கரையில் சராசரியாக ஒவ்வொரு 500 கிலோ மீட்டரில் உள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நிதியாண்டு 2013ல், அதானி குழுமத்தின் துறைமுகங்கள் வணிகம் ஏறத்தாழ 91 மில்லியன் டன் சரக்கு அளவைக் கொண்டிருந்தது.
குஜராத்தின் அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஓர் இந்திய பன்னாட்டு நிறுவனம் தான் அதானி குழுமம். இதன் தலைவராக கௌதம் அதானி உள்ளார். இந்நிலையில், நாட்டில் சராசரியாக ஒவ்வொரு 500 கிலோமீட்டர் கடற்கரைக்கும் ஓர் அதானி துறைமுகம் உள்ளது என்றும் இவை அனைத்தும் 24 விழுக்காடு ஏற்றுமதி, இறக்குமதியை கையாளுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய பங்கு வீழ்ச்சியை சந்திப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் ‘எக்ஸ்பிரஸ் விசாரணை’ யில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு குஜராத்தின் முந்த்ரா என்ற ஒரு பெரிய துறைமுகத்தை மட்டும் நிர்வகித்து வந்த அதானி குழுமம் இன்று 14 துறைமுகங்கள் மற்றும் முனையங்கள் மூலம் நாட்டின் துறைமுகங்கள் வழியாகச் செல்லும் அனைத்து சரக்குகளில் கால் பகுதியைக் கையாளும் மிகப் பெரிய தனியார் நிறுவனமாக வளர்ந்துள்ளது.