மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடத்திப் பாருங்கள் அப்போது மக்கள் தெரிவிப்பார்கள் யார் அசல் யார் போலி என்று என உத்தவ் தாக்கரே முதல்வர் ஏக்னாத் ஷிண்டேவுக்கு சவால் விடுத்துள்ளார்.
சிவசேனா கட்சி இரண்டாக உடைக்கப்பட்டு உத்தவ் தாக்கரே ஒரு அணியாகவும் ஏக்னாத் ஷிண்டே மற்றொரு அணியாகவும் செயல்படுகின்றனர். ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் பாஜகவுடன் கைகோத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளனர்.
“சட்டப் பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடினோம். இது தொடர்பான முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துவிட்டார்.
இப்போது ஒரே வழி, நடந்ததையெல்லாம் விட்டுவிடுவோம். உடனடியாகத் தேர்தலை நடத்துவதற்கு வழிகாண்போம். அப்போது உண்மையான சிவசேனா கட்சிக்கு உரிமையுள்ளவர்கள் யார் என்பது தெரியும். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலை நடத்துங்கள். இதனை எனது சவாலாகவே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
உள்ளாட்சி, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். மக்கள் எங்கள் பக்கம்தான். எங்களது வலுவை உங்களுக்கு அதன் மூலம் காண்பிப்போம்,” என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பையின் சிவாஜி மகாராஜ் பூங்காவில் நடைபெற்ற தசரா விழாவில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே இவ்வாறு எதிரணியினருக்கு சவால் விடுத்துள்ளார்.