திருவனந்தபுரம்: கேரளாவில் சமய வழிபாட்டுக் கூடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ், சி.பி.எம். கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
குண்டு வெடிப்பு விவகாரத்தை மத அடிப்படையில் திசை திருப்ப முயன்ற மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி யார் என தெரியவந்த பிறகும் இந்த விவகாரத்தை திசைதிருப்பும் விதமாகவும், மத ரீதியான பிரச்சினையை தூண்டும் விதமாகவும் கருத்து பதிவிட்டதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கொச்சி மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் அக்.29ஆம் தேதி, 2,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். அப்போது காலை 9 மணியளவில் அந்தக் கூட்டத்தில் மூன்று இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. அதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

