ஆக்ரா: ஆண் குழந்தை பிறப்பதற்கென மாத்திரைகள் சாப்பிட்ட 35 வயது ரூபிக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்திருக்கின்றன.
கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் ரூபி, தனது கணவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று கணவர் குடும்பத்தார் கொடுமை செய்ததாகவும், தற்போது மருத்துவ செலவுக்குக் கூட அவர்கள் உதவவில்லை என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயாரான அவர், கணவரின் வற்புறுத்தல் காரணமாக ஏராளமான அலோபதி மருந்துகளையும் இயற்கை மூலிகைகளையும் கலந்து சாப்பிட்டுள்ளார்.
கொடுக்கும் மாத்திரைகளை சாப்பிடாவிட்டால், 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டியதால்தான் மாத்திரைகளை சாப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

