புதுடெல்லி: நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் தாள்களில் 97 விழுக்காடு வங்கிகளுக்குத் திரும்பிவிட்டன என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இன்னும் ரூ. 10,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் பொதுமக்களிடம் உள்ளதாக புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவ்வங்கி குறிப்பிட்டது.
செலாவணி மேலாண்மை நடவடிக்கையின்கீழ், 2000 ரூபாய் தாள்களைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே 19ஆம் தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள செப்டம்பா் 30ஆம் தேதிவரை காலக்கெடு அளிக்கப்பட்டது. பின்னா் அந்தக் காலக்கெடு அக்டோபா் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அதன் தொடர்பில் ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஓர் அறிக்கை வெளியிட்டது.
அதில், “2000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியானநாளில், ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில், அக்டோபா் 31ஆம் தேதி வரை 97 விழுக்காட்டிற்கும் அதிகமான தாள்கள் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டன.
“மேலும் ரூ.10,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் தாள்கள் பொதுமக்களிடம் உள்ளன. மக்கள் அந்த ரூபாய் தாள்களை ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பியோ மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.