புதுடெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவிடம் மக்களவை நெறிமுறைகள் குழு வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கியது.
மக்களவையில் கேள்வி எழுப்புவதற்குப் பணம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மஹுவாவிடம் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வினோத் சோன்கர் தலைமையிலான நெறிமுறைக்குழு நேற்று விசாரணை நடத்தியது.
மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, மக்களவையில் இதுவரை கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்தக் கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் அண்மையில் அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் இதுகுறித்து புகார் அளித்தன் பேரில் இந்த விவகாரத்தை மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

