சண்டிகர்: தனது பள்ளியில் பயிலும் மாணவியர் 60 பேரை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளியின் முதல்வர், தன் மீது புகார் எழுந்தவுடன் தலைமறைவாகி விட்டார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நேற்று அந்தப் பள்ளி முதல்வரை வலைவீசித் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து சிறையில் அடைத்தது.
ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அவர் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அங்குள்ள மாணவிகளை தன் அறைக்கு வரவழைத்து, தேர்வில் தோல்வியுறச் செய்துவிடுவேன் என்று அச்சுறுத்தி அவர்களிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து 15 மாணவிகள் ஒன்றிணைந்து அதிபர், பிரதமர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஐந்து பக்கக் கடிதம் அனுப்பி புகார் தெரிவித்தனர். அதையடுத்து அக்டோபர் 31ஆம் தேதி அந்த பள்ளி முதல்வருக்கு எதிராக உச்சனா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதையடுத்து அந்தப் பள்ளி முதல்வர் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில், காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பாட்டியா தலைமையிலான சிறப்புக் குழு ஞாயிற்றுக்கிழமை அந்த முதல்வரைக் கைது செய்தது. காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் விரைவில் முன்னிலைப் படுத்துவார்கள் என்று தெரிகிறது.