முப்படைகளில் பணியாற்றும் அனைத்துப் பெண்களுக்கும் பேறுகால, தத்தெடுப்பு விடுப்பு

முப்படைகளில் பணியாற்றும் அனைத்துப் பெண்களுக்கும் பேறுகால, தத்தெடுப்பு விடுப்பு

1 mins read
7152653f-5071-49b4-aa99-0fdaf9758acf
இந்திய ராணுவத்தில் கணிசமான அளவில் பெண்கள் உள்ளனர். - படம்: இணையம்

புதுடெல்லி: முப்படைகளில் பணிபுரியும் பெண்கள் அனைவருக்கும் முழுச் சம்பளத்துடன் 180 நாள் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று ராணுவ அமைச்சு அறிவித்துள்ளது.

அதேபோல் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் பெண் பணியாளர்கள் அனைவருக்கும் 180 நாட்கள் தத்தெடுப்பு விடுப்பும் வழங்கப்படும்.

தற்போது முப்படைகளில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு மட்டுமே பேறுகால, தத்தெடுப்பு விடுப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இனிமேல் எல்லாப் பெண்களுக்கும் இது வழங்கப்படும்.

முழு சம்பளத்துடன் 180 நாள் குழந்தை பேறுகால விடுப்பு வழங்கப்படும். அதிகபட்சம், இரண்டு குழந்தைகளுக்கு இந்தச் சலுகையைப் பெறலாம். மேலும், குழந்தையின் 18 வயது வரை பணிக்காலத்தில் 360 நாட்கள் அதாவது கிட்டத்தட்ட ஓராண்டு காலம் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு எடுக்கலாம்.

இந்தச் சலுகைகளை, முப்படைகளிலும் பணியாற்றும் அனைத்து நிலை பெண்களுக்கும் விரிவுபடுத்தி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பாலின பேதத்தைக் குறைக்கும் வகையில் முப்படைகளில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அனைவரின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, முப்படைகளில் எந்த நிலையில் இருந்தாலும் பெண்களுக்கு பேறுகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கும் திட்டத்துக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இது முப்படைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று ராணுவ அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்