பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் ரக்கரே - ராஜீவ் காந்தி நகரில் சாலையோரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட வாகனங்களை முகமூடி அணிந்த மூன்று பேர் அடித்துநொறுக்கினர்.
அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய மூன்று முகமூடிக்காரர்கள், அந்தச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைக்கும் சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த முகமூடிக்காரர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பறந்துவிட்டனர்.
இது குறித்து ராஜகோபால் நகர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று கார் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு வாகனங்களைச் சேதப்படுத்திய முகமூடிக்காரர்களை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.