ஹைதராபாத்: ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
ஹைதராபாத்தில் திங்கட்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்தது.
பம்பள்ளி என்ற பகுதியில் அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ்த் தளத்தில் இந்த ரசாயனக் கிடங்கு இயங்கி வந்தது.
அங்கு கார் ஒன்றை சிலர் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி அங்குள்ள ரசாயன பீப்பாய் ஒன்றில் பட்டதில், தீப்பற்றியது.
ஒருசில நிமிடங்களில் மற்ற தளங்களுக்கும் தீ பரவியதை அடுத்து, இந்த கட்டடத்தில் இருந்து அனைவரும் வெளியேறினர். எனினும், 11 பேர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தினமணி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

