பெரம்பூர்: சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள உணவகத்தை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது.
இங்கு கடந்த சில நாள் களுக்கு முன்னர் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா போன்ற உணவு வகைகளில் எலிகள் நடமாடிக்கொண்டிருந்தன. இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இதுபற்றி அந்த உணவக ஊழியர் ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைக்காததால், மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை ஆய்வு செய்த மருத்துவக் கல்லூரி முதல்வர் உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து உணவகம் மூடப்பட்டது.
இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள உணவகங்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை உத்தர விட்டுள்ளது.