புதுடெல்லி: தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஏடிஎம்எம்-பிளஸ்’ எனப்படும் ஆசியான் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு இந்தோனீசியா செல்கிறார்.
நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் வட்டார, அனைத்துலகப் பாதுகாப்புச் சவால்கள் குறித்த கருத்தரங்கில் அவர் உரையாற்றுவார் என்று இந்தியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
‘ஏடிஎம்எம்-பிளஸ்’ சந்திப்பில், ஆசியான் அமைப்பின் 10 நாடுகளுடன் அவற்றின் 8 பங்காளித்துவ நாடுகளான இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றின் தற்காப்பு அமைச்சர்களும் கலந்துகொள்வர்.
வட்டாரப் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசிக்கப்படும் அக்கூட்டத்தில், பெரிய அளவிலான பாதுகாப்புச் சவால்களைக் கையாளும் விதம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தைத் திரு சிங் எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தக் கருத்தரங்கிற்கு இடையே, அதில் பங்கேற்கும் இதர நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளிலும் திரு சிங் கலந்துகொள்வார். தற்காப்பு ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடுவர்.