பனாஜி: பெங்களூரில் உள்ள கெம்பகவுடா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நவம்பர் 13ஆம் தேதி கோவாவின் தபோலிம் அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்ற விஸ்தாரா விமானம் அங்கு தரையிறங்காமல் மீண்டும் பெங்களூருக்கே திரும்பியது.
தபோலிம் விமான நிலைய ஓடுபாதையில் தெருநாய் ஒன்று காணப்பட்டது இதற்குக் காரணம்.
அந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில், ஓடுபாதையில் தெரு நாய் நிற்பதைக் கண்ட விமான நிலைய அதிகாரி, அதுகுறித்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார்.
அதையடுத்து, தரையிறங்காமல் சிறிது நேரம் காத்திருக்கும்படி விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் பெங்களூரு திரும்ப முடிவெடுத்ததாகவும் பின்னர் அந்த விமானம் மாலை மீண்டும் கோவா சென்றடைந்ததாகவும் கூறப்பட்டது.
இச்சம்பவம் குறித்துக் கருத்துரைத்த விமான நிலைய இயக்குநர் எஸ்விடி தனஞ்செய ராவ், “ஓடுபாதையில் எப்போதாவது தெருநாய்கள் நுழைவதுண்டு. அவை உடனடியாக அப்புறப்படுத்தப்படும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் முதல்முறையாக இவ்வாறு நடந்துள்ளது,” என்று கூறினார்.