புதுடெல்லி: பாகிஸ்தானிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்குள் வந்த கிட்டத்தட்ட 82 டிரோன் எனப்படும் வானூர்திகளை இந்தியா சுட்டு வீழ்த்தி செயலிழக்கச் செய்துள்ளது.
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் வானூர்திகள் அடிக்கடி எல்லை மீறி வருவது குறித்துக் கூறும் இந்திய ராணுவ;j தகவல் வட்டாரங்கள், இதுவரை ஏறக்குறைய 593 முறை பாகிஸ்தான் வானூர்திகள் எல்லைப் பகுதிகளில் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தன. மேலும், இதில் அத்துமீறி நுழைந்த 82 வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் கடந்த ஓராண்டு காலமாக வானூர்திகள் வழி போதைப் பொருள், வெடிபொருட்கள், சிறிய பெரிய ரக ஆயுதங்கள் ஆகியவற்றை இந்தியாவுக்குள் அனுப்பும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டு அந்த வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் போராளிக் குழுக்கள், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஆகியோருக்கு வானூர்திகள் மூலம் பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஆயுதங்கள், போதைப் பொருள் விநியோகிக்க பலகாலமாக முயற்சி செய்து வருகிறது.
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள எல்லை பாதுகாப்புப் படை, பஞ்சாப் காவல் துறையினர் ஆகியோருக்கு டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.