சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் தமது மனைவியைக் கொதிக்கும் எண்ணெய்யில் கையைவிட்டு கற்பை நிரூபிக்கக் கூறியதால் காவல்துறையினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டனர்..
சித்தூர் மாவட்டம் புத்லப்பட்டில் உள்ள தேனேபள்ளே பகுதியில் வசித்து வருபவர் விவசாயி குண்டையா. இவர் தமது மனைவி கங்கம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தமக்கு உண்மையாக இருப்பதை நிரூபிக்க, கொதிக்கும் எண்ணெய்யில் கைகளை விடச் சொல்லியிருக்கிறார்.
மேலும், அந்தச் செயலை கிராம மக்கள் அனைவரும் வந்து பார்க்குமாறும் கூறியுள்ளார். கற்பை நிரூபிக்கக் கொதிக்கும் எண்ணெய்யில் கையை விடுவது அந்தக் கிராமத்தின் வழக்கமான நடைமுறையாக உள்ளது.
அதன்படி அவரது வீட்டில் கிராம மக்கள் அனைவரும் கூடினர். உடனே இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல வளர்ச்சி அலுவலர் கௌரி, காவல்துறையினருடன் அந்த கிராமத்திற்குச் சென்று, கணவரின் கொடுமையைத் தடுத்து நிறுத்தி பெண்ணை பாதுகாப்பாக மீட்டுள்ளார்.
இதுகுறித்து கௌரி கூறுகையில், “குண்டையா மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். அப்போதுதான் தனக்கு உண்மையாக இருப்பதை நிரூபிக்க இந்தச் சோதனையை செய்ய வற்புறுத்தியுள்ளார்.
“பதிலுக்கு குண்டையாவும் இதனைச் செய்ய வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார். காவலில் வைக்கப்பட்டு உள்ள குண்டையாவுக்கு உளவியல் ஆலோசனை கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது,” என்றார்.