பஞ்சாப்: 1947ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த குடும்பம் மீண்டும் சந்திக்க பலமுறை முயற்சி மேற்கொண்டது. ஆனால், பல காரணங்களால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் குருத்வாரா கர்தார்பூர் சாஹிப்பில் சந்திக்க அக்குடும்பம் பலமுறை முயற்சி மேற்கொண்டது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் தேவையான அனுமதியைப் பெற அது தவறியது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபுர்தலாவில் வசிக்கும் ஹனிஃபானு, தம் மாமியார் ஹஜ்ரா பீபியை சந்திக்க பாகிஸ்தான் அரசிடம் விசா கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், அது மறுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஹஜ்ரா பீபி முதல்முறையாக ஹனிஃபானுவுக்குக் காணொளி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பின்போது தன் தங்கை மஜீதாவை பார்க்க வேண்டும் என அவர் கோரினார்.
சிறிது காலத்திற்கு முன் அவர் இறந்துவிட்டதாக ஹனிஃபானு கூறினார். அச்செய்தியைக் கேட்டு ஹஜ்ரா பீபி மனமுடைந்தார்.
இருவரும் நம்பிக்கையைக் கைவிடும் நிலையில் இருந்தபோது, பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் நசீர் தில்லானும் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியரான பால் சிங் கில்லும் அவர்களுக்கு உதவ முன்வந்தனர்.
இருவரையும் சவூதி அரேபியாவின் புனித நகரான மெக்காவில் சந்திக்க வைக்க அவர்கள் உதவினர். இதனையடுத்து, கடந்த வாரம் வியாழக்கிழமை ஹஜ்ரா பீபியும் ஹனிஃபானுவும் சந்தித்தனர்.

