விசாகப்பட்டினம்: விசாகப்பட்டின மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த 45 படகுகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீயில் எரிந்து சேதமடைந்தன. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இரவு சுமார் 11.30 மணிக்கு அந்தப் படகுகள் தீப்பிடித்து எரிந்தன. இதைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் பறந்தது.
தீயை அணைக்க மீனவர்கள் முயற்சி செய்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்தில் 45 படகுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. எரிந்த படகுகளில் ரூ.6 லட்சம் மதிப்பிலான மீன்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மீன்களை அடுத்த நாள் காலையில் மீன்களை விற்பனை செய்யலாம் என மீனவர்கள் காத்திருந்த நிலையில், இந்த தீ விபத்து பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதன் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ஆரம்பகட்ட விசாரணையில் சிலர், அங்குள்ள ஒரு படகில் மது விருந்து வைத்துள்ளனர் என்றும் அதில் அந்த படகிலேயே சமைக்கவும் செய்துள்ளனர் என்றும் தெரியவந்தது.
இதில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.