புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டம் தர்மசாலில் பாஜி மால் பகுதியில் தீவிரவாதிகள் மறைவிடம் குறித்த தகவலையடுத்து அந்த பகுதியை புதன்கிழமை முற்றுகையிட்டு ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. துரதிருஷ்டவசமாக இந்த மோதலில் இரண்டு ராணுவ அதிகாரிகளும் இரண்டு வீரர்களும் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த வீரர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜிமாலில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வழிபாட்டுத் தலத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
எல்லையோர மாவட்டங்களான ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.