நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற விவகாரம்: எம்.பி.க்களுக்கு புதிய விதிமுறைகள்

2 mins read
aa4482c2-fd61-4858-863b-3062f9e1b61d
அதானி பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்றதாக திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

கோல்கத்தா: நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்பதற்கு லஞ்சம் பெற்றதாக மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவது தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மஹுவாமொய்த்ரா, மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமத்திற்கு எதிரானவை. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார்.

இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக நாடாளுமன்ற விதிமுறைகள் குழு விசாரணை நடத்தி, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது.

நாடாளுமன்ற விதிமுறைகள் குழுவின் பரிந்துரை வரும் குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த பரிந்துரை குறித்து மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பரிந்துரை நிறைவேற்றப்பட்டால், மஹுவா மொய்த்ராவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும்.

இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பது குறித்து மக்களவைச் செயலாளர் புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளார்.

எழுத்துப்பூர்வமாக பதில் கோரப்படும் கேள்விகள், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் கணக்கில் கேள்விநேரம் முடிந்த பிறகு பதிவேற்றம் செய்யப்படும்.

வாய்மொழி, எழுத்துப்பூர்வமாக பதில் கோரப்படும் கேள்விகள் ரகசியமானவை. இவற்றின் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டியது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை என்று புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறது. இதன் ஒரு பகுதியாக மக்களவையில் இருந்து மஹுவா மொய்த்ராவை வெளியேற்ற சதித் திட்டம் தீட்டப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது ஏற்கெனவே அவர்கள் திட்டமிட்டு வைத்திருந்த ஒன்றுதான்.

பாஜகவின் இந்த பழிவாங்கும் நடவடிக்கை வரும் மக்களவைத் தேர்தலில் மஹுவா மொய்த்ராவுக்கு சாதகமாக அமையும். மக்களவைத் தேர்தல் நெருங்குகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு அடுத்த சில மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்கும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்