மும்பை: மக்களவைத் தேர்தல் 2024 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மே 10 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. எனவே, அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
அதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பாஜகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் முதல் கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் உள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் துணை முதல்வர்களில் ஒருவரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆய்வு நடத்தியதாகப் பேசியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெற்றி பெற்றவர்கள் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக பட்னாவிஸ் கூறினார். அதன் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளோம்.
இதில் பாஜக 26 தொகுதிகளிலும் சிவசேனா மற்றும் என்சிபி கட்சிகளுக்கு 22 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் முடிவு காணப்பட்டதாக பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இது இறுதியான முடிவல்ல. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பல்வேறு நிலைகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.