கோல்கத்தா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான தாக்குதலில் பாதிக்கப்பட்டு 2014 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா வந்த இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019ல் குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வந்தது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தன.
இதனால், குடியுரிமை திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோதும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அறிக்கை அடுத்த ஆண்டு தயாராகிவிடும் என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளதாக தினத்தந்தி தகவல் வெளியிட்டுள்ளது.
மேற்குவங்காள மாநிலம் வடக்கு பர்கானஸ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அஜய் மிஸ்ரா, குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்துள்ளது என்றார்.
“அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குடியுரிமை திருத்தச்சட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை தயாராகிவிடும். பின்னர் சட்டம் அமலுக்கு வரும்,” என்று அவர் கூறினார்.