புதுடெல்லி: சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நீதிமன்றங்களை அணுகுவதில் மக்களுக்கு அச்சம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவா், “அரசியல் மாச்சரியங்களை அரசின் ஜனநாயக நிறுவனங்கள் மூலம் தீா்வுகாண அரசமைப்புச் சட்டம் வழிவகுக்கிறது. நடைமுறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்குத் தீா்வு காண நீதிமன்றங்கள் உதவுகின்றன.
ஒவ்வொரு வழக்கும் அரசமைப்புச் சட்ட ஆளுகைக்கு உள்பட்டதாகும். உச்ச நீதிமன்றம் கடந்த 70 ஆண்டுகளாக மக்களின் நீதிமன்றமாக திகழ்ந்துள்ளது. எப்படியும் நீதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையால் கடைசியில் உச்ச நீதிமன்றத்தை மக்கள் நாடுகின்றனர்.
தனிமனித சுதந்திரம், கொத்தடிமைக்கு எதிராகவும், பழங்குடியினா் தங்களின் நிலங்களைப் பாதுகாக்கவும், சமூக அநீதி, மனிதக் கழிவுகளை மனிதா்களே அள்ளுவதற்கு எதிராகவும், சுத்தமான காற்றுக்காகவும் மக்கள் நீதிமன்றங்களை அணுகி உள்ளனா்.
அரசமைப்பு நடப்பு குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மக்கள் நேரடியாக கடிதம் எழுதலாம். இது உலகில் எந்த நீதிமன்றத்திலும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் நிா்வாகம் மக்கள் சாா்ந்ததாக இருப்பது உறுதி செய்யப்படும். எனவே, மக்கள் நீதிமன்றத்தை அணுக அஞ்சக் கூடாது. அனைத்துத் தரப்பு மக்களும் நீதிமன்ற நடைமுறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு, கணினிப் பயன்பாட்டில் உச்ச நீதிமன்ற தீா்ப்புகள் மாநில மொழிகளில் மொழி பெயா்த்து வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பா் 25 வரையில் 36,068 தீா்ப்புகளை உச்ச நீதிமன்றம் ஆங்கிலத்தில் வழங்கி உள்ளது. இவை அனைத்தும் உச்ச நீதிமன்ற இணையத்தில் இலவசமாக உள்ளது.
இதில், இந்தியில் மொழிபெயா்க்கப்பட்ட 21,388 தீா்ப்புகள் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. 9,276 தீா்ப்புகள் தமிழ், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், வங்காளி, உருது ஆகிய மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது,” என்றார்.