தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

25 ஆண்டுகள், 24 முயற்சிகள்! 56 வயதில் முதுநிலைப் பட்டதாரி!

2 mins read
d72e1f5a-be58-4fdd-bd60-f9394dfdddc3
56 வயதில் எம்.எஸ்சி. பட்டம் பெற்ற ராஜ்கரன் பரூவா. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

ஜபல்பூர்: வீடு இல்லை, குடும்பம் இல்லை, சேமிப்பு இல்லை, நிரந்தர வேலையும் இல்லை! ஆனாலும், சாதித்துவிட்டார்!

முகலாய அரசர் கஜினி முகம்மது விடாமல் 17 முறை படையெடுத்து வெற்றிகண்டார். ஆனால், அவரையே விஞ்சிவிட்டார் 56 வயது ராஜ்கரன் பரூவா. 23 முறை தேர்வில் தோற்றபோதும், இரண்டு ‘ஷிஃப்ட்’ வேலைக்கு இடையிலும் கிடைக்கும் வேறு வேலைகளைச் செய்துகொண்டும் படித்து, தமது முதுநிலைப் பட்டக் கனவை நனவாக்கினார் ராஜ்கரன்.

“இப்போது நான் ஒரு பட்டதாரி!” என்று பெருமையுடன் கூறுகிறார் ராஜ்கரன்.

“ஆயினும், மூடிய அறைக்குள்தான் என்னால் கொண்டாட முடிந்தது. மகிழ்ச்சியில் குதித்து, எனக்கே நான் கைகொடுத்துக்கொண்டேன்.

“இதனை நான் வெளியில் சொல்ல இயலாது. ஏனெனில், என் முதலாளிகள், என்னைக் குறிப்பிட்டு, அவர்களுடைய குழந்தைகளை இகழ்வதை வழக்கமாகக் கொள்ளலாம். இந்த வயதிலும் மனவுறுதியுடன் அவர் எவ்வளவு சிரமப்பட்டு படித்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்,

“அதனால், என்னால் அந்தக் குழந்தைகள் தொல்லைக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக அமைதியாகக் கொண்டாடி, என் வெற்றியை எனக்குள்ளாகவே வைத்துக்கொண்டேன்,” என்று ராஜ்கரன் சொன்னதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

“இப்போது நான் வேலையை விட்டுவிட்டேன். அதனால், நான் சாதித்ததை வெளியில் சொல்லிக்கொள்ளலாம்,” என்றார் அவர்.

கணக்குப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற இவர் எடுத்துக்கொண்ட காலம் 25 ஆண்டுகள். இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரிலுள்ள ராணி துர்காவதி பல்கலைக்கழகத்தில் இவர் 1996ஆம் ஆண்டு எம்.எஸ்சி. படிப்பில் சேர்ந்தார். 1997இல் முதன்முறையாக எம்.எஸ்சி. தேர்வெழுதித் தோற்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு 18ஆவது முறையாகத் தேர்வில் தோற்றபோது அதைப் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. அதுவே தனக்கு ஊக்கம் அளித்ததாகக் கூறுகிறார் ராஜ்கரன்.

“18ஆவது முறையும் தோல்வியுற்ற வருத்தத்தில் இருந்தேன். அதைப் பற்றிய செய்தி வெளியானதும் மற்றவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கினர். தொலைக்காட்சி ஒளி வழிகளும் என்னைக் கண்டன. அது எனக்குப் பேரூக்கமாக அமைந்தது,” என அவர் நினைவுகூர்ந்தார்.

மாதம் ரூ.5,000 சம்பளத்திற்கு இரவுநேரப் பாதுகாவலர் பணி; பகலில் தங்குமிடம், உணவு மற்றும் ரூ.1,500க்காக பங்களா ஒன்றில் உதவியாளர் பணி என இருவேலைகளை ராஜ்கரன் செய்து வந்தார்.

“25 ஆண்டுகளாக எப்படியோ வாழ்க்கையை நகர்த்தி வந்தேன். ஆயினும், புத்தகம், தேர்வுக் கட்டணம், கல்வி சார்ந்த இதர செலவுகளுக்காக இரண்டு லட்சம் ரூபாய்க்குமேல் செலவிட்டிருப்பேன். எப்படியாவது தேர்ச்சி பெற்று, நான் ஒரு முதுநிலைப் பட்டதாரி என்று அழைக்கப்பட விரும்பினேன்,” என்றார் அவர்.

ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டதற்கு, “என்னை யார் மணந்துகொள்வார்கள்? நான் என் கனவுகளை மணந்துகொண்டேன்,” என்றார் ராஜ்கரன்.

முயற்சியும் பொறுமையும் இருந்தால் எதையும் அடையலாம் என்பதே இத்தனை ஆண்டுகாலத்தில் தான் கற்றுக்கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்