புதுடெல்லி: கேரளாவில் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள மனுக்கள் குறித்து ஆளுநர் மீதான வழக்கு விசாரணை, புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆளுநர் தரப்பில் வெங்கடரமணி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கேரள அரசு குறிப்பிட்ட 8 சட்ட முன்வரைவுகளில் (மசோதா) 7 சட்ட முன்வரைவுகள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இவ்வாறு 8 சட்ட முன்வரைவுகள் மீதும் ஆளுநர் முடிவு எடுத்திருப்பதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், மாநில அரசின் மனுவில் திருத்தம் செய்ய அனுமதி அளித்தனர். அத்துடன் இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் ஆளுநர் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
சில அரசியல் சாமர்த்தியத்தால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம், இல்லையெனில், நாங்கள் சட்டத்தை வகுத்து, அரசியலமைப்பின் கீழ் எங்கள் கடமையைச் செய்வோம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.