சில்க்யாரா: இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகச் சேர்ந்து சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 ஊழியர்களை மீட்டனர்.
ஹசன் முன்னா குரேஷி, நசீம் மாலிக், மோனு குமார், சாரப், ஜடீன் குமார், அங்கூர், நசீர் கான், தேவேந்திர ஃபிரோஸ் குரேஷி, ரஷீத் அன்சாரி, இர்ஷாத் அன்சாரி ஆகியோர் சுரங்கத்தில் இருந்தவர்களை மீட்டனர். அவர்களுடைய வயது 20 முதல் 45 வரையிலானது.
இந்துக்களும் முஸ்லிகளும் சேர்ந்து 41 ஊழியர்களைக் காப்பாற்றியிருக்கின்றனர் என்று உத்தராகண்ட் மீட்புப் பணியில் ஈடுபட்ட நிறுவனத்தின் முதலாளி வாகீல் ஹசன் கூறியுள்ளார்.
இந்நிறுவனத்தின் எலி வளை ஊழியர்கள் உத்தராகண்ட் சுரங்கத்தில் கடைசிக் கட்டமாக கையால் தோண்டி செவ்வாய்க்கிழமை சுரங்க ஊழியர்களை அடைந்தனர்.
தனது குழு உறுப்பினர்களின் பல தரப்பட்ட சமய நம்பிக்கைகளை முதலாளி சுட்டிக்காட்டினார்.
தனியாக மட்டும் இவ்வேலையைச் செய்து முடிக்க முடியாது என்றார் அவர்.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராக்வெல் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தின் முதலாளியான வாகீல் ஹசன், எங்களுடைய குழுவில் முஸ்லிம்களும் இந்துக்களும் உள்ளனர். இரு சமயத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் போராடி 41 பேரைக் காப்பாற்றியுள்ளனர். இவர்களில் ஒருவர்கூட தனியாக இப்பணியைச் செய்திருக்க முடியாது என்று இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
“நாம் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். வெறுப்புணர்வைத் தூண்டக்கூடாது. நாட்டுக்கான 100 விழுக்காடு பங்கை அளிக்க விரும்புகிறோம். என்னுடைய இந்தச் செய்தியை அனைவருக்கும் பரப்புங்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இமயமலை சூழ்ந்த வடக்கு மாநிலமான உத்தராகண்ட்டின் சில்க்யாராவில் உள்ள சுரங்கத்தில் தீபாவளி தினத்தன்று (நவம்பர் 12) 41 ஊழியர்கள் பணிபுரிந்துகொண்டு இருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக 41 ஊழியர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களைக் காப்பாற்ற பதினேழு நாள் கடும் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர்.