திருப்பதி: திருப்பதி கோயிலில் மயங்கி விழுந்த மணப்பெண் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 21 வயது லட்சுமி சாய் சந்தோஷ் என்பவருக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23ஆம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் 27ஆம் தேதி லட்சுமி சாய் சந்தோஷ் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்றனர் என்று மாலைமலர் தகவல் தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை மாலை வரிசையில் சென்றனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையானை தரிசித்து விட்டு தங்கம் மண்டபம் அருகே புதுமணப் பெண் நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
அவரது குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள அதிகாரிகள் அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லட்சுமி சாய் சந்தோஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய லட்சுமி சாயின் பெற்றோர், அவருக்கு சிறு வயது முதலே சுவாசக் கோளாறு இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு வந்ததால் மயங்கி விழுந்து இறந்ததாகவும் காவல்துறையிடம் கூறினர்.
இதையடுத்து உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே புது மணப்பெண் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.