புதுடெல்லி: ஃபோர்ப்ஸ் ஆசியா இதழின் நன்கொடையாளர்கள் பட்டியலில், நந்தன் நிலகனி, கே.பி.சிங், நிகில் காமத் என மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் ஆசியா இதழ், 17வது வருடாந்தர நன்கொடையாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தரவரிசைப்படுத்தாத இப்பட்டியலில், ஆசிய பசிபிக் வட்டார நாடுகளில் கடந்த ஆண்டு அதிக நன்கொடை வழங்கிய 15 பேர் இடம்பிடித்துள்ளனர்.
குறிப்பாக தங்கள் சொந்த நிதியை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர்களும் குறிப்பிட்ட சமூக செயலுக்காக நேரத்தை செலவிட்டவர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இப்பட்டியலில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் நிலகனி, டிஎல்எஃப் கௌரவத் தலைவர் கே.பி.சிங், ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதில் நந்தன் நிலகனி, தான் படித்த மும்பை ஐஐடி கல்வி நிலையத்திற்கு ரூ.320 கோடி நன்கொடை வழங்கினார். கடந்த 1999 முதல் இதுவரை அந்தக் கல்வி நிலையத்திற்கு இவர் ரூ.400 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான டிஎல்எஃப் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய கே.பி.சிங், 92, ரூ.730 கோடி நன்கொடை வழங்கி உள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இளம் கோடீஸ்வரர் நிகில் காமத், 37, இப்பட்டியலில் முதல்முறையாக இணைந்துள்ளார்.
எரிசக்தி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ள இவர், ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார்.