கோல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் புதன்கிழமை காலை புறநகர் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ரயில் தடம் புரண்ட பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து குறித்து அவர் கூறுகையில், “மேற்கு வங்க மாநிலம், பாக்னன்-ஹவுரா புறநகர் ரயில் ஒன்று திகியாபாரா மற்றும் ஹவுரா ரயில் நிலையங்களுக்கு இடையே ஹவுரா நோக்கிச் சென்ற ரயில் புதன்கிழமை காலை 9 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
“நடைமேடை அருகே ரயில் மெதுவாக நகர்ந்ததால் பயணிகள் யாருக்கும் காயங்கள் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
“ரயில் தடம் புரண்ட அந்த வழித்தடத்தில் மட்டும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
“தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் தண்டவாளத்தை சீரமைத்து ரயில் சேவையை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,” என்றார்.

