குருகிராம்: அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் குருகிராமின் கெர்கி துல பகுதியில் இருந்த வங்கி ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி அதிலிருந்து ரூ. 20 லட்சத்தைத் திருடியதுடன் தீ வைத்தும் கொளுத்திவிட்டனர்.
சம்பவம் டிசம்பர் 8ஆம் தேதியன்று காலை சுமார் 5.45 மணிவாக்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
எந்த ஒரு தடயவியல் ஆதாரமும் மிஞ்சக்கூடாது என்பதற்காகத் திருடர்கள் இவ்வாறு தீ வைத்தனர் எனத் தாங்கள் நம்புவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தைக் காட்டும் கண்காணிப்பு கேமரா பதிவின்படி காரில் வந்த இருவரும் இயந்திரத்தை வெட்டித் துண்டாக்கி, பணத்தை எடுத்துக்கொண்டு, தீ மூட்டிவிட்டு கார் பின்பகுதியில் பணத்தை வைப்பதாகத் தெரிகிறது.
பின், கார் புதுடெல்லியை நோக்கிச் செல்வதாகக் காட்டப்படுகிறது.
இயந்திரத்தில் இருந்த மொத்த பணத்தையும் திருடர்கள் எடுத்துவிட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் தங்களுக்குத் தடயம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் சந்தேக நபர்கள் எவரும் கண்டறியப்படவில்லை என்றும் குருகிராம் காவல்துறை பேச்சாளர் சுபாஷ் போகன் தெரிவித்தார்.